Tuesday 2 July 2024

2028ல் சுக்கு நூறாக சிதற போகும் பூமி

 

     2028 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் பெரிய விண்கல் ஓன்று மோதி பூமி சுக்கு நூறாகப் போகிறதா?. 1998 ல் மசாசூசெட்ஸ்  மற்றும் கேம்ப்ரிட்ஜ்  அஸ்ட்ரோ பிசிக்ஸ் சென்டரைச் சேர்ந்த விஞ்ஞானிகள், "1997 XF11"  என்று பெயரிடபட்டிருக்கும்  விண்கல், பூமி மீது மோதும் சூழ்நிலை ஏற்பலாம் என்று சொல்லவே, உலகமே பீதிகுள்ளாகியது.

     650 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பத்து கிலோ மீட்டர் அகலமே உள்ள சிறிய விண்கல் ஓன்று  பூமி மீது மோதியது. அது வெளிபடுத்திய சக்தி எவ்வளவு தெரியமா? ஆயிரம் கோடி மெகா டன் டி.என்.டி. (TNT) ஆகும். 600 கோடி ஹிரோஷிமா அணுகுண்டிற்கு சமம். தென் அமெரிக்காவில் மோதிய அந்த விண்கல் ராட்சஸ அலைகளை எழுப்பி சிதறச் செய்தது. உஷ்ணம் மேலிட்டு நீராவியும் தூசியும் எழுந்தது பூமியின் மேற்புறத்தைச் சூழ்ந்து கொண்டது.

     விளைவு, நீடித்த இருள், நீடித்த குளிர், இந்த நிலை 70 சதவிகித புவி வாழ் உயிரினங்களை அழித்தது. அதில் அழிந்தது தான் டைனோசர் இனமும் கூட. இதே நிலை மீண்டும் வந்து விடகூடது என்ற கவலையில் உலகமே விஞ்ஞானிகளைப் பரிதாபமாகப் பார்த்தது. பூமிக்கு 48,000 கிலோமீட்டர் அருகில் வரபோகும் விண்கல் கணக்கு சிறிது பிசிராக இருந்தாலும் மோதி விட்டால் என்ன செய்ய முடியும் என்ற யோசனையில்...


       அவசரம் அவசரமாக ஒரு பெரிய குழு இதை மீண்டும் ஆராய தொடங்கியது. பிறகு விண்கல் பூமியை 9,60,000 கிலோ மீட்டர் தூரம் தள்ளிப் போகும் என்ற நல்ல செய்தி கிடைத்தது. ஆஹா, பூமி ஒரு வழியாகப் பிழைத்தது. ஆனால், இந்த பீதி, விஞ்ஞானிகளை வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது. இன்னொரு விண்கல் வந்தால் ?....

     பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை Near Earth Object என்று கூறுவர்.  N.E.O என்று சுருக்கமாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட  என்.இ.ஓக்களை பற்றி ஒரு தனி ஆய்வு செய்ய வேண்டும் என்ற சிந்தனை  மேலோங்கியது. நாஸாவின் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரி கலிபோர்னியாவில் உள்ளது. இங்கே என்.இ.ஓக்களைப் பற்றி ஆய்வு அலுவலகம் தொடங்கப்பட்டது.

     இந்த விஷயத்தில் நிபுணரான டான் யோமான்ஸ் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அருகில் உள்ள 2000 பொருள்களில் 90 சதவீகிதம் பொருள்களைக் கவனிப்பது என்று தீர்மானிக்கபட்டது. இந்த ஆய்வு முடிய சுமார் பத்து ஆண்டுகள் ஆகும். இதற்குப் பல கோடி டாலர் செலவு ஆகுமே என்று கூறும் போது. இதற்கு அமெரிக்கர்களின் பதில் என்ன தெரியுமா ?

 

     "ஆனால் என்ன? 'தீப் இம்பாக்ட்' 'ஆர்மெகடான்' "ஆகிய படங்கள் எடுத்த செலவுதானே இது என்கின்றனர். இந்த இரு படங்களுமே பூமியைத் தாக்க வரும் விண்கற்களிலிருந்து பூமி காப்பாற்றபடுவதை கருவாகக் கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

       "2028 Doomday; flase alarm" என்று ஆகிவிட்ட போதிலும், என்றுமே நிரந்தரமாக மனித இனத்தைக் காக்க ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இப்போது என்.இ.ஒ ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment